ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 12 –
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஒப்புதலின்படி, “கலசலிங்கம் சமூக வானொலி நிலையம்-88.4 எஃப். எம்”, பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டது. இணை வேந்தர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் வாழ்த்துரை வழங்கினர்.
துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் வானொலி நிலையத்தை திறந்து வைத்து, ” சமூக ஈடுபாட்டைவலுப்படுத்துவதற்கும், கல்வி, சுகாதாரம், விவசாயம், கலாச்சாரம் மற்றும் சமூக மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த வானொலி நிலையம் ஒரு தளமாக இருக்கும்” என்று உரையாற்றினர். ஆராய்ச்சித்துறை இயக்குநர் பள்ளிகொண்ட ராஜசேகரன் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் கற்பக சுந்தரம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக பங்காற்றி நிகழ்ச்சியை நடத்தினர்.
வானொலி நிலையத்திற்கு பயிற்சி, தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் ஒலிபரப்பு ஆதரவை வழங்குவதற்காக பல்கலைக்கழகம் மற்றும் கோயம்புத்தூர் ஏர் மீடியா பிராட்காஸ்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த வானொலி நிலையம் 20 கி. மீ. சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு கல்வித் திட்டங்கள், மாணவர் திறமைகள், நிபுணர் பேச்சுக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் செய்திகளை ஒலிபரப்புகிறது. இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



