தஞ்சாவூர், மார்ச் 5 –
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமி பட்டி பகுதியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது: மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது திமுக அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மணல் மாஃபியா கும்பலுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்ல முடியுமா? விவசாயிகள் கஷ்டப்பிட்டு விளைவித்த நெல் மழையில் நனைந்து வீணானது.
டெல்டாகாரன் என சொல்லிக் கொள்ளும் முதல்வர், விவசாயிகளின் போராட்டத்திற்கு துணை நின்றது உண்டா? விவசாயிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்வதுதான் திமுக அரசின் சாதனை. மீனவர்கள் பிரச்சனைக்கு முதல்வர் அவ்வப்போது கடிதம் எழுதுகிறார். கடிதம் எழுதுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. மத்திய அரசுக்கு உண்மையான உணர்வு பூர்வமான அழுத்தத்தை கொடுத்து இருக்க வேண்டும்
அடுத்தும் திமுக ஆட்சிதான் என முதல்வர் சொல்கிறார். அதெல்லாம் நடக்கவே நடக்காது. விஜய்யை முடக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யையும், விஜியையும் உங்களால் முடக்கவே முடியாது. அவர்கள் ஏற்கெனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். அதை யாராலும் தடுக்க முடியாது.
எரிவாயு உருளைக்கு ரூபாய் 100 மானியம், கரும்புக்கு ஆதார விலை ரூபாய் 4000, நீண்ட நாள்களாக திருமணமாகாத பெண்களுக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை போன்ற வாக்குறுதிகள் என்னவாயின? மாநில அரசால் முடியவே முடியாது எனத் தெரிந்தும் நீட் தேர்வை ஒழிப்போம் எனக் கூறி மிகப்பெரிய மோசடி செய்தனர். எனவே தீய சக்தி திமுக ஆட்சி மறைய வேண்டும் தூய சக்தி தவெக ஆட்சி வர வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், துணைப்பொதுச் செயலாளர் ராஜ்மோகன், மத்திய மாவட்ட செயலாளர் இரா.விஜய் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 4900 நிர்வாகிகள் பங்கேற்பர் என காவல் துறையினரிடம் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் நிர்வாகிகளை தவிர தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரசிகர்கள் உள்ளே புகுந்தனர்.



