நாகர்கோவில், மார்ச் 2 –
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் டதி பள்ளி சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அங்கிருந்த மரத்தில் மாநகர காங்கிரஸ் தலைவரும், மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலருமான நவீன்குமார் தலைமையில் காங்கிரசார் பிரதர் மோடியை அவமதிக்கும் வகையில் அவரது திருவுருவ பொம்மையை கட்டி தொங்கவிட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சென்று உருவ பொம்மை அப்புறப்படுத்தினர். இந்த தகவல் அறிந்ததும் பாரதிய ஜனதா கட்சியினர் அந்த பகுதியில் திரண்டு பிரதமரை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாறிய லில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட பாஜ. வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில் பா ஜ கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கவுன்சிலர் ரமேஷ் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நவீன் குமார் உட்பட கண்டால் தெரியும் 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் நவீன் குமாரை சம்பவ தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



