விளாத்திகுளம், மார்ச் 02 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீரங்கபுரம் – நூத்தலக்கரை சின்னையாபுரம் கிராமம் வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 146.76 லட்சம் மதிப்பீட்டில் 3.200 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை மற்றும் ஒரு பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தமிடப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த சாலை அமைக்கும் பொழுது சாலைகள் மற்றும் பாலங்கள் முறையாக அமைக்கப்படவில்லை என்றும், சாலை அமைக்கும் பொழுது தார் கலவைக்கு பதிலாக, பழைய கழிவு ஆயில் ஜல்லி கற்களை கொண்டு சாலை அமைத்ததாகவும், பாலக்கட்டுமான பணிக்கு, சிமெண்ட் கலவைக்கு பதிலாக சுண்ணாம்பு கலவையை வைத்து தரமற்ற முறையில் நடைபெற்றதாகவும், இது குறித்த கிராம மக்கள் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரிடமும், அரசு பொறியாளரிடமும் முறையாக சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது, ஒழுங்கா போறீங்களா இல்ல போலீஸிடம் உங்களை பிடித்து கொடுத்து விடவா மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில் கிராமப் பகுதிகளுக்கு திட்டப் பணிகள் வருவதே நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது, அவ்வாறு வரும் திட்டங்கள் முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். போடப்பட்ட புதிய தார் சாலை ஒரு இன்ச்சுக்கு குறைவான கணத்தில் இருப்பதாகவும், கைகளால் தொட்டால் போர்வை போலும், கையோடு கருப்பு நிற மண்ணாக கையோடு வருகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சாலையை மறு சீரமைத்தும்,கிராம மக்களை மிரட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



