ஈரோடு, பிப். 16 –
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ம.தி.மு.க கோவை மண்டல தேர்தல் நிதியளிப்பு கூட்டம் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தலைமையில் நடந்தது. பொருளாளர் பொறியாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார் . அவரிடம் ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி நாமக்கல் சேலம் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் நிதி வழங்கினர். இதை பெற்றுக் கொண்ட வைகோ பேசியதாவது: கடந்த காலத்தில் நான் செய்த பிழையால் என் மீதான நன்பக தன்மையை இழந்து விட்டேன். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது மன்னிக்க முடியாத முடிவாகும். மீண்டும் இதுபோல விமர்சனம் ஏற்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
நமது கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நபர் பெரும் கோடிஸ்வரராக மாறிவிட்டார். அவர் என் மீது பழி போடுவது ஏற்க முடியாதது. அதுவும் ஒரு மரணத்திற்கு நான் தான் காரணம் என்று என் மீது பழி போடுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மரணம் அடைந்தவரின் குடும்பத்தினர் அவரது பேச்சை நம்பவில்லை என்பது எனக்கு பெரும் ஆறுலாக உள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அக்னி பரீட்சை பேச்சு வார்த்தை நடக்கப் போகிறது திமுகவுடன் கூட்டணி என்ற முடிவு எடுத்தபிறகு யாரும் திமுக வையும் ஆட்சியையும் விமர்சிக்க வேண்டாம். அனைத்து கட்சிகளிலும் நிபந்தனை விதிக்கப்படுவது அவர்களது உரிமை. போட்டியிட்ட இடங்களை கேட்பது ஆட்சியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை. அதில் குறை சொல்ல முடியாது ஆனால் நாம் எந்த நிபந்தனையும் முன் வைக்காமல் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கோபால் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் சேது பாஸ்கர், கிழக்கு மாவட்ட செயலாளர் வீரக்குமாரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், சேலம் கிழக்கு பால்ராஜ், மேற்கு மகேந்திரவர்மன், நீலகிரி சிவகுமார், கோவை மாநகர் மாவட்டம் செல்வராஜ், கோவை மேற்கு ராஜேந்திரன், தெற்கு செந்தில், திருப்பூர் வடக்கு மணி, தெற்கு தமிழரசு, மாநகர் மாவட்டம் டாக்டர்.நாகராஜ், சேலம் மத்திய மாவட்டம் விக்னேஸ்வரன் மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பூங்கொடி சௌந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



