மார்த்தாண்டம், பிப். 6 –
அருமனை அருகே உள்ள மேல்பாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு, திரும்பி பணிக்கு செல்லும் போது ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்தார். இவரது மனைவிக்கு ரயில்வே துறை மற்றும் ராணுவம் சார்பில் தலா ஐம்பது லட்சம் என ரூ. 1 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கியது. அந்த பெண்ணின் இரண்டு பிள்ளைகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6 மற்றும் 5ம் வகுப்பில் படித்து வருகின்றனர்.
அப்போது பள்ளியில் படிக்கும் ஒரு மகனின் நண்பனின் தாய் ஒருவரிடம் ராணுவ வீரரின் மனைவிக்கு நட்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் கணவரும் ராணுவத்தில் பணியாற்றுவதால் 2 பேரும் மிகவும் நெருங்கி பழகி வந்தனர். இந்த நிலையில் மேல்பாலை பெண்ணிடம் பெண்கள் குழு இருப்பதாக கூறி அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தினால் 8 லட்சம் வரை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி 30 லட்சம் பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அவருக்கு பணம் திருப்பி வரவில்லை.
இந்த சம்பவங்களை அறிந்த கல்லூரி பெண் ஊழியர் ஒருவர் ராணுவ வீரர் மனைவியிடம் பழகி அவரும் பணம் பெற்றுள்ளார். ராணுவ வீரர் மனைவி எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்துக் கொண்டதால் 2 பெண்களும் பல்வேறு வழிகளில் சுமார் ரூ. 1.30 கோடி மதிப்பில் பணம் நகைகளை மோசடி செய்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராணுவ வீரர் மனைவி மாவட்ட எஸ்பி ஸ்டாலினிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட பெண்கள் குறித்து போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த 2 பெண்களும் தலைமறைவாகியுள்ளதாக தெரிய வருகிறது. போலீசார் 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.


