குளச்சல், ஜனவரி 31 –
தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திங்கள்நகரில் உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது 15 வயது மகன் குளச்சலில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் மாலையில் பள்ளி முடிந்ததும் தாயார் வேலை செய்யும் கடைக்கு சென்று விட்டு மீண்டும் தாயுடன் சேர்ந்து மேக்கா மண்டபத்திற்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 29ம் தேதி திங்கள்நகரில் தாய் வேலை செய்யும் கடைக்கு சிறுவன் செல்லவில்லை. பின்னர் சிறுவன் இரவு வீட்டிற்கு தாமதமாக சென்றுள்ளார். அப்போது தாய் விசாரித்த போது, பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்கு காத்து நின்ற போது அடையாளம் தெரியாத நபர் தன்னை மணவாளக்குறிச்சி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். அப்போது அங்கு 2 பேர் வந்ததால் சிறுவனை அங்கே விட்டு விட்டு அந்த மர்ம நபர் தப்பி சென்றுள்ளார்.
பின்னர் சிறுவனை அங்கு வந்தவர்கள் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுவனின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


