நாகர்கோவில், ஜனவரி 26 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து எஃப்ஐஆர் – உங்கள் உரிமை திட்டத்தை எஸ்பி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் தினமான குடியரசு தினமாகிய இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உங்கள் உரிமை திட்டத்தினை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து புகார்தாரர்களுக்கு எஃப்ஐஆர் நகலினை வழங்கி தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து நம்பிக்கையை அதிகரிக்க இந்த திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் BNSS சட்டப்பிரிவு 173(2) வழக்கின் புகார்தாரர், குற்றம் சுமத்தப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட நபர் ஆகியோர் எஃப்ஐஆர் நகலினை இலவசமாக பெற்றுக் கொள்ளும் அதிகாரத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளின் எஃப்ஐஆர் நகல் உடனடியாக புகார்தாரர்களுக்கு காவல் நிலையம் அல்லது புகார்தாரர்களின் கிராமங்களில் நியமிக்கப்பட்ட ஊர்க்காவல் கண்காணிப்பு திட்ட போலீசார் மூலமாக வழங்கப்படும்.
மேலும் https://www.police.tn.gov.in/citizenportal என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பொதுமக்கள் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இணையதளம் மூலம் புகார் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் காவல்துறையினரின் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் எஃப்ஐஆர் பதிவு சம்பந்தமான வெளிப்படை தன்மை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் பயன்படுகிறது.
இந்தத் திட்டமானது சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் அவர்கள் மேற்பார்வையில் பொதுமக்கள் கருத்து மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு புகார்தாரர்கள் அனைவருக்கும் வழக்குப்பதிவு செய்தவுடன் எஃப்ஐஆர் நகலானது உடனடியாக இலவசமாக கிடைப்பது உறுதி செய்யப்படும். இது சம்பந்தமான தகவல்களை பொதுமக்கள் கருத்து மைய எண்கள் 7708239100, 6385211224 மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிதா, பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் மற்றும் புகார்தாரர்கள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக 9 பேருக்கு எஃப்ஐஆர் நகலை எஸ்பி ஸ்டாலின் வழங்கினார்.



