மார்த்தாண்டம், ஜனவரி 22 –
கடையால் பேராட்சிக்கு உட்பட்ட கோதையாற்றின் நடுவில் போடப்படுள்ள உறைகிணற்றின் மீது முதலை படுத்திருந்த 3 வீடியோக்கள் வீடியோ சமூக தளத்தில் ஏற்கனவே பரவியது. இந்த நிலையில் நேற்று அதே உறை கிணற்றிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கரையோரம் ஒரு பெரிய முதலை படுத்து கிடந்தது. அந்த பகுதி வழியாக சென்ற வாலிபர்கள் தங்களது செல்போனில் முதலில் படம் பிடித்தனர். பின்னர் மக்கள் சத்தம் போட்டு அந்த முதலை தண்ணீருக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து சிறிது நேரத்துக்கு பின் உறைகிணற்றில் மற்றொரு முதலையும் படுத்திருந்தது. இதுவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது.
நேற்று காலை கோதையாற்றில் முதலை நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறை உயிரியல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் வனத்துறையினர் படகுகளில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் முதலை சுற்றி வரும் பகுதிகளை வீடியோ எடுத்ததுடன் அவற்றை பிடிக்க என்னென்ன முறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஒரு முதலையை தொடர்ந்து இரண்டாவது ராட்சத முதலை தென்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் வனத்துறையினர் கூறுகையில்: விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்ததால் மக்கள் சத்தம் கேட்டு முதலைகள் வெளியே வராமல் இருந்த நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் மீண்டும் முதலைகள் வெளியே வர தொடங்கியுள்ளது என்று கூறினார். இந்த நிலையில் மேலும் வனத்துறையினர் கூறுகையில் முதலைகள் பிடிபடும் வரை ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.



