தஞ்சாவூர், ஜனவரி 20 –
ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிரான போராட்ட வழக்கிலிருந்து அமைச்சர் கோவி. செழியன், எம்பி எம்எல்ஏ உள்ளிட்டோரை விடுதலை செய்து தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு அளித்தது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிராகவும், மத்திய மாநில அரசு களை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி ரயில் மறியல் போராட்ட ம் நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தற்போதைய கல்யாண சுந்தரம் எம்பி தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் கோவி. செழியன், கல்யாணசுந்தரம் எம்பி, சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ, நகர்மன்றத் துணைத் தலைவர் சுப தமிழழகன், செல்வராஜ் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கும்பகோணத்தில் நடந்து வந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் அமைத்துள்ள தஞ்சாவூர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை கடந்து 8 தேதி நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். இதனால் அமைச்சர் கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்பி, அன்பழகன் எம்எல்ஏ, சுப. தமிழழகன் ஆகியோர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கே.என்.செல்வராஜ் ஏற்கனவே வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்து விட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கனிமொழி விசாரித்து இந்த வழக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், இந்த வழக்கிலிருந்து அமைச்சர் கோவி செழியன் எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாக கூறி தீர்ப்பளித்தார்.



