நாகர்கோவில், ஜன.5 –
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோயிலில் தேர்த் திருவிழாவில் அமைச்சர் பக்தர்களின் மனம் புண்படும் படியாக பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்து கோயில்களிலும் நடைபெறுகின்ற நிகழ்வுகளும், குறிப்பாக திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் தேரோட்ட நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் பங்களிப்பு மூலம் தான் நடைபெற்று வருகிறது. இது அமைச்சருக்கு தெரியுமா? அல்லது மறந்து விட்டாரா?
இந்நிலையில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது. அமைச்சரின் காலதாமதத்தின் காரணத்தால் தேரோட்ட நிகழ்வு தொடங்குவது காலதாமதமானது. இது தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களின் மனதினை புண்படச் செய்துள்ளது. இந்த காலதாமதத்தை அமைச்சர் தவிர்த்து இருக்க வேண்டும்.
மேலும் திருவிழா காலங்களில் பக்தர்கள் அந்தந்த தெய்வங்களை நினைத்து பக்தி கோஷங்கள் போடுவது எல்லா திருக்கோவில்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. அது போன்று தான் சுசீந்திரத்திலும் தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் காலதாமதமாக வந்த அமைச்சர் பக்தர்கள் எழுப்பிய கோஷத்தை பொறுக்க முடியாமல் பக்தர்களை தகாத வார்த்தையால் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
சுசீந்திரம் 10 நாள் திருவிழாவிற்கு அரசு மூலம் ஒதுக்கிய தொகை வெறும் 2 லட்சம் தான். ஆனால் பக்தர்களின் பங்களிப்பு 20 லட்சமாகும். மக்களின் பங்களிப்பு மூலம் செயல்படுகின்ற ஒரே துறை இந்துசமய அறநிலையத்துறை மட்டும் தான். இதனை அமைச்சர் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்நிலையில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழாவில் பக்தர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



