கூத்தாநல்லூர், டிசம்பர் 27 –
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா, பழையனூர் ஊராட்சி நன்னிமங்கலம்
கிராமத்தை சேர்ந்தவர் டைலர் சிவக்குமார். இவரது மனைவி சுமதி, இவர்களுக்கு சுவாதி, ஸ்வேதா, சிவேஸ்வர் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளின் தாயார் சுமதி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு புற்றுநோயாலும், தந்தை சிவக்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாகவும் இறந்து விட்டனர். பெற்றோர்களை இழந்த நிலையில்,
மூன்று குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வந்தனர். ஒழுகும் குடிசை வீட்டில் மூவரும் தனியாக வசித்து வந்தனர். அக்கம்பக்கத்தினர் அவ்வப்போது இயன்ற உதவிகளை செய்து வந்தனர்.
பெற்றோரை இழந்து வருமானம் எதுவுமின்றி வறுமையில் வசித்த நிலையிலும், தங்களது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தாமல் சித்தப்பா, சித்தி உதவியுடன் சுவாதி, ஸ்வேதா ஆகிய இருவரும் கூத்தாநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பும்,
சிறுவன் சிவேஸ்வர் அரசு உதவி பெறும் பள்ளியில் 5 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இவர்களின் கல்விக்கும் வாழ்வாதாரத்திற்கும் அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமென
செய்தி வெளியான நிலையில், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிறிய உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த செய்தி அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன் மற்றும் ஆட்சியர் மோகனச்சந்திரனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
முதலமைச்சரின் உத்தரவின்படி, நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்ற தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன்
ஆகியோர் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கினர்.
மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஜனவரி) முதல் “அன்புக்கரம்” திட்டத்தின் மூலம் மாதந்தோறும்
ரூ.2000 வழங்கவும், அவர்கள் தற்போது வசிக்கும் இடம் நீர்நிலை புறம்போக்கு வகைபாட்டில் உள்ளதால், அந்த இடத்தில் கான்கிரீட் வீடு கட்ட முடியாத சூழல் உள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் விரைவில் கான்கிரீட் வீடு கட்ட ஏதுவாக, தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவினை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினார்கள்.
மேலும் வீடியோ கால் வாயிலாக குழந்தைகளிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நிச்சயம் அரசு செய்துதரும் என ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மன்னார்குடி கோட்டாட்சியர் யோகேஸ்வரன், வட்டாட்சியர் வசுமதி ஒன்றிய செயலாளர்கள் குமரேசன், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



