நாகர்கோவில், டிச. 13 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் இன்று 13-ம் தேதி இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகித்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களின் தென் மண்டல பொறுப்பு அலுவலர் பா.தில்லைவேல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்: குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான 4694 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4040 கட்டுப்பாட்டு கருவிகளும், 2802 விவிபேட் கருவிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கிட்டங்கியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் பெல் நிறுவனத்தை சார்ந்த 9 பொறியாளர்கள் கொண்ட குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 11.12.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இப்பணியானது காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணிகளில் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும் என்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் எந்தவித சுணக்கமும் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டுமென சரிபார்ப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.



