தஞ்சாவூர், மே 19 –
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் குழந்தைகளால் தமிழக வெற்றிக் கழகம் வென்றதாக திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற திருவாரூர் தொகுதி சட்டப் பேரவை திமுக உறுப்பினர் கே.கலைவாணன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது: திமுகவை பொறுத்த வரையில் எத்தனையோ தேர்தல்களை பார்த்துள்ளது. இதில் பல வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளது என்றாலும் தோல்வி அடைகின்ற நேரத்தில் தான் திமுக எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவை போல கிளம்பி எழக்கூடிய நிலையில் வரும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்கள், மாணவ, மாணவிகள், பெண்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை மறந்து விட முடியாது. இந்த திட்டங்கள் அனைத்தையும் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். எனவே நாமும் தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.
கடந்த மக்களவைத் தேர்தலில் முடிந்த பிறகு, சட்டப்பேரவை தேர்தலுக்கான பணியை தொடங்கினோம். பாகமுகவர் நியமனம், பூத் கமிட்டி அமைத்து கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி, இளைஞர் அணி, மகளிர் அணி, மண்டல மாநாடு, பாக முகவர் மாநாடு, ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர் மண்டல அளவில் சில பொறுப்பாளர்கள் நியமனம் போன்றவற்றை மேற்கொண்டோம். இவ்வளவு பணிகள் செய்தும் ஏன் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை.
ஆனால் எந்த பணியும் செய்யாமல், வாக்காளர்களை சந்திக்காமல், பாகம் முகவர்களை நியமிக்காமல், பூத் முகவர் அமைக்காமல், வாக்கு எண்ணிக்கை முகவர் கூட பல இடங்களில் இல்லாமல் வெற்றி பெற்று ஆட்சி வந்துள்ளனர். அது தவறு இல்லை.
சமூக ஊடகங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, வீட்டில் இருக்கக்கூடிய பெரியோரிடம் மிக சுலபமாக பிள்ளைகளையும், குழந்தைகளையும் வைத்து திட்டமிட்டு பிரச்சாரம் செய்துள்ளனர். அது நம்முடைய கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. இனி மேல் நாமும் உஷாராக இருந்து அதையும் முறியடிக்கிற வகையில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடுகிறோம். எனவே தொண்டர்கள் எதையும் கவலைப்படாமல் மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றார் ஸ்டாலின்.



