நாகர்கோவில், மே 28 –
நாகர்கோவில் ஒழுகினசேரியில் மாவட்ட திமுக அலுவலகம் உள்ளது. நேற்று இரவு கோட்டாரிலிருந்து ஒழுகினசேரி நோக்கி ஒரு மினி டெம்போ சென்று கொண்டிருந்தது. இந்த டெம்போவில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி கட்டப்பட்டு இருந்தது. மாடசாமி என்பவர் வாகனத்தை ஓட்டி சென்றார். மினி டெம்போ திமுக மாவட்ட அலுவலகத்திற்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக பழுதாகி நின்றது. அப்போது அங்கு நின்ற கும்பல் அந்த மினி டெம்போவை தள்ளி சென்று சாலையோரம் நிறுத்தியது.
இதை தொடர்ந்து டெம்போவை தள்ளியதற்கு பணம் தருமாறு ஓட்டுனர் மாடசாமியிடம் அந்த கும்பல் கேட்டு மிரட்டி உள்ளார்கள். பணம் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் ஓட்டுநர் மாடசாமியை சரமாரியாக தாக்கியது. தாக்குதலில் நிலை குலைந்த மாடசாமியை அந்த கும்பல் திமுக மாவட்ட அலுவலக இரும்பு கேட் மீது தூக்கி வீசியது. இதில் கேட் பெயர்ந்து உடைந்தது.
அதன் பின்னரும் அந்த கும்பல் திமுக அலுவலகத்தை தாக்கினர். இதற்கிடையில் திமுக அலுவலக கேட்டை உடைத்து விட்டதாக செய்திகள் பரவின. தகவல் அறிந்தவுடன் திமுக மாவட்ட செயலாளர் மகேஷ் உள்ளிட்ட ஏராளமாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சம்பவ இடம் விரைந்து சென்றனர். வடசேரி போலீசாரும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தாக்கப்பட்ட ஓட்டுநர் மாடசாமி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மாவட்ட தலைநகரில் திமுக அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அலுவலக பொறுப்பாளர் குமார், மினி டெம்போ டிரைவர் மாடசாமி ஆகியோர் மர்ம கும்பல் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாக தெரிய வருகிறது.



