நாகர்கோவில், டிசம்பர் 12 –
நாகர்கோவில் மாநகராட்சி 36வது வார்டு பூசாஸ்தான் குளக்கரையில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மேலும் 45வது வார்டு பழவிளை காவடிப் பிறை தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, கவுன்சிலர்கள் ரமேஷ், சதீஷ், உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநகராட்சி வருவாய் பிரிவு சுகாதாரப் பிரிவு நகரத் திட்ட அமைப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவு அலுவலர்களுடன் மேயர் மகேஷ், ஆணையர் நிசாந் கிருஷ்ணா ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் மகேஷ் நாகர்கோவில் மாநகராட்சியில் பஸ் நிலையம், மற்றும் பொது இடங்களில் இருக்கக்கூடிய இலவச கழிவறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் அந்த கழிவறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். கட்டண கழிவறைகளும் சுத்தமாக ஒப்பந்ததாரர் மூலம் பராமரிக்கப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
கழிவறைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தால் கழிவறைகளுக்கான அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். நகரப் பகுதிகளில் மாநகர வருவாய் பிரிவு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக சற்குண வீதியில் ஆய்வு செய்த மேயர் மகேஷ், சாலை ஓரங்களில் இருசக்கர விற்பனையாளர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி இருந்த வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.


