தென்காசி, டிச. 8 –
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நயினரகரத்தில் இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் நயினரகரம் சந்தை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பன் (42) தன்னுடைய மனைவி சண்முகத்தாய், பிள்ளைகள் ஈஸ்வரி, பொன்னுத்துரை ஆகியோருடன் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் ஒரு பக்க சுவர் முழுவதும் இடிந்து வீட்டின் வெளிப்பக்கம் விழுந்தது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வருவாய் துறை அலுவலர்கள் நேரில் வந்து சேதமான வீட்டை பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மா. செல்லத்துரை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி மாரியப்பன் குடும்பத்தினருக்கு 25 கிலோ அரிசி காய்கறி பொருட்களை வழங்கினார்.



