தஞ்சாவூர், டிசம்பர் 1 –
தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை என சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன் கூறினார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தொல்காப்பியர் சுழலரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தமிழ் மொழி மற்றும் மொழி புல இணை பேராசிரியர் செல்வகுமார் நோக்க உரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பன்னீர் செல்வம் வாழ்த்தி பேசினார்.
விழாவில் சென்னை பல்கலைக்கழக தமிழ்மொழி துறை தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசியதாவது: ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கண பெரும் படைப்பான தொல்காப்பியத்தில் ஆயிரக்கணக்கான அரிய கருத்துக்கள் நிறைந்துள்ளது. தொல்காப்பியர் வகுத்து தந்த விதிகள் தான் ஒட்டுமொத்த தமிழுக்கும் அடிப்படை அந்த மரபுதான் இன்று வரை தமிழை கட்டி காத்து வருகிறது.
தொல்காப்பியம் பழமையான இலக்கண நூல் மட்டுமல்ல; இப்போது உயிர்ப்புடன் இருக்கிறது. இதன் உச்சத்தை உலகில் வேறு எந்த மொழியும் தொடவில்லை. எனவே தொல்காப்பியம் இந்தியா வின் பாதுகாக்கப்பட வேண்டிய ஞான செல்வமாகவும், மனித நுண்ணறிவில் உலக அளவில் முக்கியமானதாகவும், இந்திய நாகரீகத்தின் முதல் இலக்கிய வெளிப்பாடாகும் போற்றப்படுகிறது. தபால் துறை தொல்காப்பியருக்கு மிகச் சிறப்பான தபால் தலை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பாலகிருஷ்ணன் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலமாக பேசினார். முன்னதாக இலக்கியத் துறை தலைவரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான தேவி வரவேற்றார். பேராசிரியர் இளையா பிள்ளை நன்றி கூறினார்.



