தஞ்சாவூர், ஜூலை 16 –
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ரூபாய் 40 லட்சத்தில் பொருத்தப்பட்ட 102 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை மக்களவை உறுப்பினர் முரசொலி தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் 6 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து செயல் இழந்தன. இதனால் புதிய கேமராக்கள் பொருத்த பக்தர்கள் வலியுறுத்தினர். இதன்படி ரூபாய் 40 லட்சத்தில் கோவிலின் நுழைவு வாயில் முதல் உள்பிரகாரம் முழுவதும், அனைத்து முக்கிய சன்னதிகள், திருசுற்று மண்டபங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 102 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றில் 2 கேமராக்கள் 360 டிகிரி கோணத்தில் சுழன்று கண்காணிக்கும் திறன் கொண்டவை.
இவற்றின் செயல்பாட்டை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் முரசொலி தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: இக்கோயில் பக்தர்களின் கோரிக்கையின்படி தொல்லியல் துறை அலுவலர்களிடம் வலியுறுத்தப்பட்டதன் விளைவாக இந்த 102 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கோவிலின் 3 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் ஒரு மையம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 2 மையங்களும் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
தேவைப்பட்ட பகுதிகளில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கழிப்பறை வசதிகளும், மேம்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுற்றுலாத்துறை சார்பில் கோயிலில் ரூபாய் 25 கோடியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்த புள்ளி விரைவில் கோரப்படவுள்ளது என்றார் முரசொலி.
நிகழ்ச்சியில் தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அறவாழி, உதவி கண்காணிப்பு பொறியாளர்கள் உமேஷ், சரவணன், பெரிய கோயில் முதுநிலை பராமரிப்பு உதவியாளர் சோபிதா, முதுநிலை தோட்டக் கலை உதவியாளர் பாலசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



