கன்னியாகுமரி, நவ. 25 –
மருங்கூர் பேரூராட்க்கு உட்பட்ட மருங்கூர் அமராவதிவிளை செல்லும் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மருங்கூர் சந்திப்பு வேப்பமூடு பகுதியில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன் தலைமை தாங்கினார்.
இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தை மருங்கூர் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மார்க்கஸ் மற்றும் மார்ட்டின் ஏற்பாடு செய்திருந்தனர். மாநில மகளிர் பாசறை செயலாளர் மற்றும் மருங்கூர் வார்டு கவுன்சிலர் ஜெமீலா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பேசியதாவது:
தமிழகத்தில் கள்ளசாராய சாவு, விலைவாசி உயர்வு போன்றவற்றை கட்டுப்படுத்த டாஸ்மாக் உருவாக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறோம். அறவழியில் போராடி வருகிறோம். நாங்கள் இன்னும் நீதிமன்றத்தையும், மாவட்ட கலெக்டரையும் நம்புகிறோம். பொதுமக்களுக்காக நாங்கள் நடத்தும் போராட்டம் எப்போதும் அறவழியில் இருக்கும்.
டாஸ்மாக் கடை அமைக்க 2003ல் வரைமுறை கொண்டு வந்துள்ளனர். அதன்படி, ஒரு பேரூாராட்சிக்குள் 50 மீட்டர் தொலைவிற்குள் வழிபாட்டு தலங்கள் இருக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த டாஸ்மாக் கடைக்கு 30 மீட்டர் தூரத்தில் ஒரு இந்து கோவில் உள்ளது.
மேலும், இந்த பகுதியில் 15 அடி சாலை அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அரசு பேருந்து கஷ்டப்பட்டு செல்கிறது. இந்த பகுதி வழியாக தான் பொதுமக்கள் பயணிக்கின்றனர். அரசியல் தலைவர்கள், அதிகாரிகளிடம் முறையிட்டு விட்டோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம். சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்காமல் இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் ஒலிக்கும். மருங்கூர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கிற்காக மட்டுமல்ல. நாகர்கோவில், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கான நீதிமன்றத்தை அணுகுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பிரபு, அகஸ்தீஸ்வர வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ், அகஸ்தீஸ்வர வடக்கு மாவட்ட செயலாளர் ரேவதி, அகஸ்தீஸ்வரம் வடக்கு மாவட்ட பொருளாளர் கார்த்திக், மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் பகவதி அம்மாள், அகஸ்தீஸ்வரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அருள், மாநில வீரதமிழர் முன்னணி துணைச் செயலாளர் கலைமணி, அகஸ்தீஸ்வர நடுவண் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஷீலா உள்பட ஏராளமான நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



