நாகர்கோவில், நவம்பர் 25 –
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வைத்தார். கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்களில் எம்.பி. எம்.எல்.ஏ. நிதியில் பணி மேற்கொள்ள தடையில்லா சான்று வழங்கப்படுவதில்லை. இதனால் வளர்ச்சிப்பணிகள் தடைபடுகின்றன. தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்யப்படுகிறதா? ஆடு, மாடுகளும் தெருக்கள், சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக ரோட்டில் திரிகின்றன. அவற்றைப் பிடித்து கோசாலையில் விட வேண்டும். தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
49வது வார்டு பகுதியில் புதிதாக தெருவிளக்கு அமைக்க மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிளக்குகள் இன்னும் வரவில்லை. நிறைய இடங்களில் திருவிளக்கு கேட்டும் இன்னும் கொடுக்கப்படவில்லை. பல இடங்களில் தெருவிளக்கு எரியவில்லை. என்.ஜி.ஓ. காலனியில் மூன்று கடைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. 45வது வார்டில் மூன்று வீடுகளுக்கு தண்ணீர் வரி அதிகமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. மாதம் ரூ.150க்கும் மேல் வரி வசூல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாலை 6 மணி ஆனாலே கொசுக்கள் படையெடுத்து வருகின்றது. கொசு தொல்லையை ஒழிக்க வேண்டும். மாநகரத்தில் நெடுஞ்சாலை துறையால் நடக்கும் சாலைகளும் தரமாக போடப்படவில்லை. பார்வதிபுரம் பகுதியில் மருத்துவமனைகள் உட்பட பல வணிக நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி இடம் விடாமல் பார்க்கிங் இட வசதி இல்லாமல் கட்டுமானங்கள் கட்டி வருகின்றனர் என்றனர்.
இதற்கு மேயர் மகேஷ் பதிலளித்து பேசியதாவது: பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டிய கால்வாயில் தூர் வாரும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டால் கூட அதற்கு பொதுப்பணித்துறை ஏன் என கேள்வி கேட்கிறது. மேலும் எந்தெந்த பணிகளுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. நிதியிலிருந்து பணம் வருகிறதோ அந்த பணிகள் மேற்கொள்ள தடை விதிப்பது இல்லை. ஓரிரு பணிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தடையில்லா சான்று வழங்காமல் இருந்திருக்கலாம். இனி அதற்கு தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வதை கவுன்சிலர்களும் பார்க்கும் வகையில் கண்காணிப்பு கேமரா இணைப்பு கொடுக்கப்படும். சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து அடைக்க கோசாலைக்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தெரு விளக்குகளை பராமரிக்க இருந்த பணியாளர் ஓய்வு பெற்று விட்டார். தற்போது மாநகராட்சியில் புதியதாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடைகளுக்கு கூடுதல் வரி, மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் கட்டணம் அதிகமாக வசூலிப்பது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


