ஆம்பூர், மே 25 –
கடந்த 1997ம் ஆண்டு முதல் ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணாக்கர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மிகச் சிறப்பானதொரு தொழில்நுட்ப கல்வியினை வழங்கும் வகையில் சோலூரில் இயங்கி வரும் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் 2005ம் ஆண்டில் பல்வேறு துறைகளில் டிப்ளமோ முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு கல்லூரியில் உள்ள கே அமீனூர் ரஹ்மான் உள் அரங்கில் நடைபெற்றது.
இதில் 21 ஆண்டுகள் கழித்து 2005 ஆம் ஆண்டில் டிப்ளமோ முடித்த மாணவ மாணவியர்கள் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி (DCT), டிப்ளமோ இன் ஃபுட்வேர் டெக்னாலஜி (DFT), டிப்ளமோ இன் லெதர் டெக்னாலஜி (DFT), டிப்ளமோ இன் என்விரான்மென்டல் இன்ஜினியரிங் அண்ட் பொல்யூஷன் கண்ட்ரோல் இன்ஜினியரிங் (DEPCE) மற்றும் டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (DECE) உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து கல்லூரியில் தாங்கள் படிக்கும் காலங்களில் நடந்த நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நினைவுபடுத்தி கலந்துரையாடி மகிழ்வதுடன் தற்பொழுது தங்களுடைய வாழ்க்கையில் தொழில்நுட்பக் கல்வி எந்த அளவிற்கு மாபெரும் மாற்றத்தையும் மற்றும் முக்கிய பங்காற்றியது என்பதை பற்றியும் அனைவரும் விளக்கி பேசி உங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஜனாப் கே சாகித் மன்சூர் சாஹிப் சிறப்பு விருந்தினராகவும் தலைமை ஏற்றும் விழாவில் சிறப்புரை ஆற்றினார். மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் த.ராஜமன்னன் முன்னிலை வகித்து சந்திப்பின் முக்கியத்துவத்தை பற்றியும் பின்னால் வரக்கூடிய தலைமுறையினருக்கு வழிகாட்டுதல்களை பற்றியும் வேலைவாய்ப்பு மற்றும் மாணவர்கள் சேர்க்கையின் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கி கூறினார்.
மேலும் இந்த சந்திப்பின் நினைவாக குழு புகைப்படம் எடுத்தல், தாங்கள் படித்த வகுப்பறை மற்றும் ஆய்வகங்களுக்கு சென்று பார்வையிடுதல் போன்ற உணர்வு பூர்வமான நிகழ்வுகளும் நடைபெற்றது. பள்ளிக்கல்வியை முடித்தவுடன் மிக குறுகிய காலகட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளிலும் தொழில் நிறுவனங்களிலும் பணிபுரிய உறுதுணை புரிகின்ற இது போன்ற தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை நடத்தி வரும் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியானது தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் நடத்தி வருகின்றது.
இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் கல்லூரிக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் இடையேயான நல்லுறவு தொடர்ந்து நீடிப்பதற்கும் தற்போது கல்விப்பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதலுக்கும் மிகச்சிறந்ததொரு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் ஏதுவாக அமையும் என்பதிலே எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இது போன்ற நிகழ்ச்சிகள் மாணாக்கர்களின் வாழ்க்கையிலே மிகப் பெரிய சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் மேலும் சாதிப்பதற்கு உறுதுணையாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.



