தென்காசி, நவம்பர் 25 –
தென்காசி மாவட்டம் துரைச்சாமிபுரத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தென்காசி மாவட்டம் துரைச்சாமிபுரத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட சாலை விபத்தில் 73 நபர்கள் மீட்கப்பட்டதில் 7 நபர்கள் இறந்துள்ளார்கள். 60 நபர்கள் சிகிச்கைக்காக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், 6 நபர்கள் திருநெல்வேலி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து KAYESR உரிமத்தினை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் என்னிடமும், மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்தின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து காயமடைந்த அனைவருக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்கள்.
மேலும் உடனடியாக என்னை சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை வழங்குவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டதற்கிணங்க காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து சிகிச்சை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 இலட்சமும், பெருங்காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 இலட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.



