ஈரோடு, நவ. 25 –
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மேலிட பார்வையாளர் லோபோ தமிழ் நாடு மேலிட பார்வையாளர் விவேக் லஜபதி ஆகியோர் கலந்து கொண்டு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் கருத்துகள் கேட்டு மனுக்கள் பெற்றனர்.
அப்போது அகில இந்திய மேலிட பார்வையாளர் கூறியதாவது: தமிழ் நாட்டில் 77 காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இந்த மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமனம் குறித்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும் இந்த பதவிக்கு போட்டியிடலாம். அவர்களிடம் கருத்து கேட்டு தன்னம்பிக்கை மற்றும் திறமையாக செயல்படுபவர்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் விபரம் டெல்லிக்கு அனுப்பப்படும். இவர்களில் ஒருவரை அவர்களின் திறமை செயல்பாட்டை விசாரித்து ராகுல் காந்தி அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் பதவிக்கு இப்போது மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் திருச்செல்வம் மாவட்ட முன்னாள் தலைவரும் கவுன்சிலருமான ஈ பி ரவி கட்சியின் 4 ம் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் உள்பட பலர் மனு கொடுத்தனர்.
முன்னதாக நேற்று மாலை ஈரோடு மரப்பாலத்தில் உள்ள மண்டபத்தில் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் மேலிட பார்வையாளர் லோபோ, தமிழக காங்கிரஸ் மேலிட தலைவர் விவேக் லஜபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.



