தஞ்சாவூர், நவம்பர் 18 –
தஞ்சாவூர் அரசுராசா மிராசுதார் மருத்துவமனையில் ரூபாய் 12 கோடியில் கட்டப்பட்ட 100 படுக்கை வசதிகளுடன் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறக்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறினார்.
தஞ்சாவூரை அடுத்துள்ள தென்னங்குடி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2 கோடியே 50 லட்சத்து ஒன்றாவது பயனாளிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் மருந்து பெட்டகத்தை வழங்கினார். தென்னங்குடி ஊராட்சியில் ரூபாய் 1.40 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ஒரத்தநாடு தாலுக்கா ரூபாய் 1.27 கோடி செலவில் வாண்டையார் இருப்பு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், வடக்கூரில் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தையும் அமைச்சர் மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.
பின்னர் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மகப் பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு கொண்ட தாய் சேய் நலப் பிரிவு மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை மைய பிரிவினை யும் அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி. செழியன், முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம்,மேயர் சண்.ராம நாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார் ,மாவட்ட சுகாதார அலுவலக கலைவாணி, துணை இயக்குனர் மாதவி குணசீலன், மாநகர்நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடை கோடி மனிதர்களுக்கும் மருத்துவ சேவையை முழுமையாக கொண்டு சேர்க்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டது. அதன்படி ஒரு திட்டம் தொடங்கிய பிறகு அந்தத் திட்டம் மக்களுக்கு தொடர்ச்சியாக செல்கிறதா? என ஆய்வு செய்வதில் நமது முதலமைச்சருக்கு நிகர் அவர் தான். 2 கோடி பயனாளர்களை கடந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த ஐநா சபை கூட்டத்தின் போது, உலகில் தொற்ற நோய்களுக்கான மருந்துகள் தருவதில், தடுப்பதில், எந்த நாடு சிறந்து விளங்குகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்தபோது இந்தியாவில் தமிழகம் தான் என கண்டறியப்பட்டு விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பினால் 2012 ஆம் ஆண்டு 66 பேரும், 2017 ஆம் ஆண்டில் 65 பேரும் உயிரிழந்தார்கள். இதுதான் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பினால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட ஆண்டு. இந்த 2 ஆண்டுகளிலும் ஆட்சியில் இருந்தது அதிமுக தான். கடந்த 11 மாதங்களில் வெறும் 9 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். திமுக பொறுப்பேற்ற 4 1/2 ஆண்டுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் டெங்கு பாதிப்பு உயிரிழப்புகள் உள்ளன.
தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 100 படுக்கை வசதி கொண்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கொண்ட தாய், சேய் நல்ல பிரிவு மற்றும் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டப்பட்டது . இதில் ரூபாய் 10 கோடிக்கு கட்டிட மும், ரூபாய் 2 கோடிக்கு மருத்துவ உபகரணங்களும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் 3 வாரங்களில் நிறைவடைந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார் இவ்வாறு அவர் கூறினார்.



