நாகர்கோவில், நவ. 7 –
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதிய மற்றும மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஏ.டி.எம் எந்திரங்கள் அஞ்சல்துறையால் நிறுவப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது.
அவ்வகையில், நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் அலுவலகங்களில் ஏ.டி.எம் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை வாயிலாக பணபரிவர்த்தனை மேற்கொள்ளவும், வங்கி கணக்கு இருப்பை அறிந்து கொள்ளவும் மற்றும் இதர வங்கி சேவைகளையும் பெற முடியும். மேலும் பிற வங்கிகளின் ஏ.டி.எம் அட்டைகளை அஞ்சலக ஏ.டி.எம் மையங்களிலும் பயன்படுத்தலாம்.
மேலும் இந்த ஏ.டி.எம் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். இது வழக்கமான அலுவலக நேரங்களில் அஞ்சலகத்திற்கு வர இயலாத வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வசதியான சேவையை வழங்குவதாக உள்ளது. எனவே இந்த ஏ.டி.எம். சேவைகளை உபயோகித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.



