திருவெண்ணெய்நல்லூர், அக்டோபர் 31 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்திலிங்கமடம் மதுரா பல்லரிப்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு மங்கள இசை, அனுக்கை, சங்கல்பம், கணபதி பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக தீப ஆராதனை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், மூலிகை ஹோம பூஜைகள், நாடி சந்தானம் வருண பூஜை, வாஸ்து சாந்தி முதலிய சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சாமிக்கு மகா பூர்ணாஹீதி உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
அதன் பின்னர் மகா தீபாரதனை, கடம் புறப்பாடு, ஆலய வலம் வருதல் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீபாலகணபதி, ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீசிவசக்தி அம்மன் ஆகிய கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.



