நாகர்கோவில், ஏப். 13 –
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ இன்று காலை வல்லன்குமாரன்விளை பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அங்கிருந்து என் ஜி ஓ காலனி, மறவன் குடியிருப்பு, வட்டகரை, பெரிய விளை, தட்டான் விளை, ராமன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று வீதி வீதியாக பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். முதியவர்களிடம் அவர் ஆசி பெற்று இளைஞரிடம் கை குலுக்கி வாக்கு சேர்ப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அவர் தனது பிரச்சாரத்தில் பேசுகையில்: நாகர்கோவில் தொகுதியில் வளர்ச்சிக்காக நான் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அதற்காக சட்டமன்றத்தில் எனது குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் தடை இன்றி தொடரவும் மேலும் புதிய திட்டங்களை கொண்டு வரவும் தாமரை சின்னத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களும் தகுதி உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி கிடைக்க நான் பாடுபடுவேன்.
மேலும் நாகர்கோவிலில் சட்டக்கல்லூரி, விவசாயக் கல்லூரி தொடங்கப்படும். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நான் செயல்படுவேன். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம். தொகுதி மக்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். பிரதமர் மோடி நாகர்கோவிலுக்கு வரும் 15ஆம் தேதி அவர் பங்கேற்கும் ரோடு ஷோவில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



