புதுக்கடை, அக். 24 –
குமரி – கேரள இடையே நீர்வழி போக்குவரத்துக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மா என்ற கால்வாயை உருவாக்கி அதன்வழி வணிகம் செய்து வந்தார். காலப்போக்கில் இந்த கால்வாயை மக்கள் பயன்படுத்தாததால் கேட்பாரற்று கிடந்த கால்வாயை பல பகுதிகளில் மக்கள் ஆக்ரமிப்புகள் செய்தனர். இதனால் நீண்டு விரிந்து கிடந்த கால்வாய் குறுகி ஓடையாக தற்போது மாறியுள்ளது. இந்த கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேங்காப்பட்டணத்தை அடுத்த முள்ளூர்துறை மீனவ கிராமம் வழியாக செல்லும் ஏவிஎம் கால்வாயை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி செய்து பணிகளை துவங்கி உள்ளார். இந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுவழிப் பாதையாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழிப்பாதையை மறைத்து கட்டிடம் கட்டுவதால் பேரிடர் காலங்களில் இந்த பாதை வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படும் என்றும் புகார் எழுந்தது.
இதனையடுத்து நேற்று மாலையில் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பங்கு பணியாளர் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்தால், வேலை செய்ய வந்தவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். மேலும் அரசு நிலத்தை ஆக்ரமிப்பு செய்து கட்டிடம் கட்ட முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுடைய வழிப்பாதையை மீட்டு தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



