நாகர்கோவில், செப். 25 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 9 க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது இயங்கி வருகிறது. குறிப்பாக செண்பகராமன் புதூர் பகுதியில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் அனைத்தும் தற்போது மழையில் நனைந்து வருகிறது. ஆனால் அதன் எதிர்புறம் டாஸ்மாக் குடோன் செயல்பட்டு வருகிறது. மதுபானங்கள் மழையில் நனையாமல் பாதுகாக்க குடோன்கள் கட்டியுள்ள அரசு, நெல்மணிகளை பாதுகாக்க குடோன்கள் இதுவரையும் கட்டப்படவில்லை.
குறிப்பாக செண்பகராமன் புதூர் நெல் கொள்முதல் நிலையத்தின் அருகில் தென்னை மதிப்பு கூட்டு மையத்திற்கு பல கோடி மதிப்பீட்டில் குடோன்கள் கட்டி காலியாக விடப்பட்டுள்ளது. அதில் தற்போதைய மழை காலத்தை கவனத்தில் கொண்டு மழையில் நனைந்து சேதமாகி வரும் நெல்மணிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வரும் நெல்மணிகளை பாதுகாக்க முடியும். அரசு 17% ஈரப்பதம் உள்ள நிலை கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பித்திருப்பதாக நெல் கொள்முதல் நிலையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே விவசாயத்தை காக்க விவசாயிகள் அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பாதுகாப்பதற்கு உடனடியாக தென்னை மதிப்பு கூட்டு மையத்தில் காலியாக இருக்கும் குடோன்களை திறந்து நெல்மணிகளை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



