திண்டுக்கல், செப். 25 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நூத்தலாபுரம் ஊராட்சி தும்மலப்பட்டி கிராமத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உதவி திட்ட அலுவலர் முத்துப்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் முஹமது அத்தீப் வரவேற்றார்.
முகாமில் விராலிபட்டி, குளத்துப்பட்டி, தும்மலப்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் மனு அளித்தனர். இதில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், உடனடி தற்காலிக மின் இணைப்பு, இருப்பிட சான்றிதழ் பெயர் மாற்றம், வருமான சான்றிதழ்கள் என உடனடியாக தீர்வு காணப்பட்ட 25 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் இந்த முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதாமகேஸ்வரி, திமுக நிர்வாகிகள் ஜான் போஸ்கோ, பாலசந்திரன், செல்வம், மலையாளம், வேல்முருகன், கந்தபிரபு, ஸ்டாலின் உட்பட ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



