கன்னியாகுமரி, செப். 23 –
பாஜக வர்த்தகர் பிரிவு மாநில அமைப்பாளர் சதீஷ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் பொற்கால ஆட்சியில் தேசமே வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமாக ஜி.எஸ்.டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இதுவரை 4 அடுக்குகளாக இருந்தது. அதாவது, 5, 12, 18, 28 என இருந்தது. அது மாற்றியமைக்கப்பட்டு இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி செலுத்தப்பட்ட பெரும்பான்மையான பொருட்கள் 5 சதவீத வரிக்குள் வந்துவிட்டது. இதேபோல் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி பட்டியலில் இருந்த பெரும்பான்மையான பொருட்களின் வரி குறைக்கப்பட்டு 18 சதவீத வரியாக்கப்பட்டு விட்டது.
இந்த வரி குறைப்பினால் பொதுமக்கள், வர்த்தகர்கள் என அனைத்துத் தரப்பினரும் நல்ல பலனைப் பெறுவார்கள். உதாரணமாக நெய், வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு 12 சதவீதமாக இருந்த வரி இப்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 18 சதவீதம் வரி இருந்த ரெடிமேட் புரோட்டா, 5 சதவீதம் இருந்த சப்பாத்தி இவற்றிற்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. பன்னீருக்கு 5 சதவீதமாக இருந்த வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. கார், மோட்டார் சைக்கிள்களின் ஜி.எஸ்.டியும் 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் குறைந்தபட்சம் 65 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 3 லட்சம் வரை மக்களுக்கு மிச்சமாகியுள்ளது.
மருத்துவ உபகரணங்கள், சுகர் டெஸ்ட் மிஷின் உள்ளிட்டவற்றிற்கும் ஜி.எஸ்.டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சைக்கிளுக்கான ஜி.எஸ்.டியும் 5 சதவீதமாக குறைத்து சைக்கிள் விலையும் குறைந்துள்ளது. கட்டுமான துறையில் சிமெண்ட்டை பொறுத்தவரை அதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளதால் மூடைக்கு குறைந்தபட்சம் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது.
ஏற்கனவே கடந்த பட்ஜெட்டின் போது, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்து சரித்திரம் பேசும் சாதனையை செய்தது மோடிஜி அரசு. அதனோடு சேர்ந்து இன்னொரு ஜாக்பாட்டாக ஜி. எஸ். டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
ஜி.எஸ்.டி வரி குறைப்பினால் மக்களுக்கு பொருட்களை வாங்கும் சக்தி அதிகரிக்கும். இது மக்களுக்கு கிடைக்கும் லாபம். வரி குறைந்ததால் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் அதிகளவில் பொருட்கள் விற்கும். இது வணிகர்களுக்கு கிடைக்கும் லாபமும், மகிழ்ச்சியான செய்தியும் ஆகும். வருமான வரி விலக்கு, ஜி.எஸ்.டி வரி குறைப்பு என மக்கள் நலன் சார்ந்தே சிந்திக்கும் மோடிஜி அரசுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



