நாகர்கோவில், அக். 10 –
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தை சர்வதேச தரத்தில் அனைத்து ரெயில்களும் வந்து செல்லும் வகையில் டெர்மினல் ரெயில் நிலையமாக மாற்ற இந்திய ரெயில்வே நிர்வாகம் திட்ட மிட்டு உள்ளது. இதற்காக கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ.300 கோடி செலவில் நவீனமயமாக்கப்படுகிறது. இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரங்கள், நடைபாதைகள், பயணிகள் ஓய்வு அறை, கழிப்பறை, விசாலமான கார் பார்க்கிங் வசதி, பூங்கா வசதி, கேண்டீன் வசதி, உணவு விடுதி, தங்கும் விடுதி உள்பட பல்வேறு கட்டமைப்புகளுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தனி ரெயில் மூலம் இன்று கன்னியாகுமரி வந்தார். பின்னர் அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். ரயில் நிலையத்தில் 4 வது, 5 வது பிளாட்பாரப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை பார்வையிட்ட அவர் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது அதிகாரிகள் 4 வது பிளாட்பார பணிகள் இன்னும் 2 மாதத்தில் முடிவடையும் என்றும் 5 வது பிளாட்பாரத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்கள். இதைத் தொடர்ந்து ரயில் நிலையப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை பார்வையிட்டார்.



