களியக்காவிளை, மே 13 –
திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை நடமாடும் மருத்துவக் குழு மற்றும் நெய்யாற்றின்கரை தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹீமோகுளோபின், கொலஸ்டிரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு அவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, பிரிசோதனை முடிவுகள் 2 நாள்களில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்படும் என்றும் காசநோய், புற்றுநோய், பால்வினை நோய்கள் குறித்த அறிகுறிகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை நடமாடும் மருத்துவக் குழு உறுப்பினர் விஷ்ணுபிரசாத் தலைமையில் லேப் டெக்னீஷியன் சபரிராஜ், களப்பணியாளர்கள் குமாரி, தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரிபாய், சமூக ஆர்வலர்கள் மாகீன் அபுபக்கர், ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



