நாகர்கோவில், செப். 16 –
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிலரை என் ஐ ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை கண்டறிய அவர்களின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கைதான ஒருவருடன் குமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்த என் ஐ ஏ அதிகாரிகள் முடிவு செய்து இதற்காக ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என் ஐ ஏ அதிகாரிகள் குழுவினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் அதே பகுதி ரஷீத் அகமது (62) என்பவர் வீட்டை சோதனை நடத்த அங்கு சென்றனர். ஆனால் சம்மந்தபட்ட வாலிபர் அங்கு வீட்டில் இல்லை. அவரது பெற்றோர் மட்டும் வீட்டில் இருந்தனர்.
வாலிபரை குறித்து அவர்களிடம் என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களது மகன் வேலை விஷயமாக சென்னை சென்றிருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை 9 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. அப்போது வாலிபர் குறித்து அனைத்து விவரங்களை கேட்டறிந்த என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணக்காக வாலிபரை விசாகப்பட்டினம் அலுவலகத்திற்கு வருமாறு கூறி சம்மன் கொடுத்து விட்டு புறப்பட்டு சென்று விட்டனர். சோதனையின் போது வாலிபரின் வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.



