மார்த்தாண்டம், செப். 12 –
இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் மேலாளரின் மகன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார். மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருபா, இவர் இந்தியா விளையாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற மேலாளர் தற்போது திமுக இலக்கிய அணியின் மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார்.
இவரது ஒரே மகன் ஸ்டாலின் கிருபா (39). பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கடந்த 8-ம் தேதி சொந்த ஊருக்கு வந்தவர், நேற்று மாலை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
இந்நிலையில் அவரது தந்தை ஆற்றுக்கடவில் சென்று பார்த்த போது அவரது துணிகள் மட்டும் கரையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபா குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறை அதிகாரி சந்திரன் தலைமையில் ஆற்றில் தேடிய போது ஸ்டாலின் கிருபா தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கிருபா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



