ஈரோடு, ஆக. 14 –
ஈரோட்டை அடுத்த கருமாண்டி செட்டிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பேரூராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடு தடை தொடர்பாக பேரூராட்சி மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்கப்படுகிறது. வாகனத்தில் செல்வோர் பொது இடங்களில் கழிவுகளை தூக்கி எறிபவர்கள் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் சொத்து வரியை வருகிற செப்டம்பர் மாதம் 30 ந் தேதிக்குள் செலுத்தினால் தமிழக அரசின் அறிவிப்பு படி இரண்டாம் அரையாண்டுக்கு சொத்து வரி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம். உரிய காலக்கெடுவுக்குள் வரி செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். எனவே பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தண்ணீர் வரியை உடனே செலுத்தும்படி பொது மக்கள் கேட்டு கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


