மதுரை, செப். 11 –
மதுரை அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை ICU வில் உள்ளது. மக்கள் நல்வாழ்வு துறையை மோசமான துறையை மாற்றிய அமைச்சர் மா.சு. எடப்பாடியாரை பற்றி விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது என்று கூறிய அவர் மேலும் பேசுகையில்: கழகப் பொதுச் செயளாலர் எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டங்கள் அலைமோதி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலினும், உதயநிதியும், அமைச்சருமான மா.சு. ஆகியோர் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.
குறிப்பாக திண்டுக்கல்லில் உள்ள புளி விவசாயிகள் தங்களது குறைகளை கூறி 2026 ஆண்டில் நீங்கள் முதலமைச்சராக வரும் பொழுது எங்கள் கோரிக்கை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் மா.சு. விவசாயிகளையும், எடப்பாடியாரையும் நாகரிகம் இல்லாமல் பேசியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளில் நீங்கள் கோரிக்கை நிறைவேற்ற வில்லை அதனால் தான் எடப்பாடியார் வந்தால் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதைக் கூட உங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
மேலும் எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் எழுச்சி பயண பிரச்சாரத்தில் யாருமே அழைக்காத, நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸை கூட்டத்தில் அனுப்பி விடுகிறீர்கள் இதே ஸ்டாலினும், உதயநிதியும் ரோடு ஷோ நடத்தும் பொழுது நோயாளிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸை நீங்கள் அனுமதித்தது உண்டா, இன்றைக்கு மக்கள் நல்வாழ்வு துறையை எடுத்துக் கொண்டால் மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவிலேயே டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் 27,378 பேருக்கு டெங்கு நோய் பாதிக்கப்பட்டு 13 பேருக்கு மேல் இறந்துள்ளனர்.
மேலும் இந்தியாவிலேயே தமிழகம் நாய்க்கடியில் பாதிக்கப்பட்டு அதில் மரணம் அடையும் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு 4.80 லட்சம் நபர்களுக்கு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 43 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை 3.67 லட்சம் நபர்கள் நாய் கடியால் பாதிக்கப்பட்டு இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். இன்றைக்கு மும்பைக்கு அடுத்தபடியாக நாய் கடியால் பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து நிதிநிலை அறிக்கையில் நாய்க்கடிக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி முறையாக செலவழிக்கப்படுகிறார்களா என்று தெரியவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை ICU வில் உள்ளது.
தற்போது பருவநிலை மாறி வருவதால் அதிக அளவில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. அதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரை விமர்சனம் செய்து அதன் மூலம் தங்களின் நிர்வாக சீர்கேட்டை அமைச்சர் மாசு மறைக்க நினைக்கிறார். எடப்பாடியாரை பற்றி விமர்சிக்க அமைச்சர் மா.சுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.


