விளாத்திகுளம், செப்டம்பர் 08 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனியசாமி திருக்கோவில் ஆவணி கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்செந்தூர், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 குதிரை வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு 90 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.
அதேபோல் மாட்டுவண்டி பந்தயத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூஞ்சிட்டு போட்டியில் 48 ஜோடி மாடுகளும் தேன் சிட்டு போட்டியில் 15 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பூசனூர் கிராமத்திலிருந்து விளாத்திகுளம் வரை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணம், குத்துவிளக்கு, சுழல் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாபெரும் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, விளாத்திகுளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மற்றும் விழா கமிட்டியினர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



