மார்த்தாண்டம், செப். 5 –
அருமனை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி பிந்து. இந்த தம்பதிக்கு தீபிகா என்ற மகள் உள்ளார். தீபிகாவுக்கும் கேரள மாநிலம் பால ராமபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரபுல் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயம் நடந்தது. நேற்று மேல்புறம் அளப்பன் கோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று பெண்ணின் உறவினர்கள் மண்டபத்தில் கூடினார்கள். அதிக செலவில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன.
இந்த சூழ்நிலையில் நேற்று இரவு ரபில் உறவினர் ஒருவர் பெண்ணின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு ரபுல் வேறொரு பெண்ணை காதலித்து ஓடி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் திருமணம் நின்றது. ஒரு ஆண்டுக்கு முன்பு நிச்சயம் செய்துவிட்டு தற்போது திருமண நாளில் மணமகன் மாயமானது பெண் குடும்பத்தினருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து தீபிகா குடும்பத்தினர் கேரளாவில் ரபுல் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். அங்கு ரபுல் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் கொடுத்தனர். ஆனால் கேரள போலீசார் குமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறினர். இதை அடுத்து பெண்ணின் குடும்பத்தினர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


