திருவெண்ணெய்நல்லூர், அக். 10 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சி விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒத்திகையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு, லைப்பாய், லைப் ஜாக்கெட் மற்றும் மீட்புப்பணிகளுக்கு உதவும் பவர்ஷா, கான்கிரீட் கட்டர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் மூலம் வெள்ளநீரில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, மீட்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் தீயணைப்பு நிலையை அலுவலர் கோபாலகிருஷ்ணன்(பொறுப்பு), திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் மற்றும் அரசு அதிகாரிகள், தீயணைப்பு மீட்பு வீரர்கள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.



