சென்னை, செப். 8:
லேட்டண்ட்வியூ அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் ‘சென்னை கால்பந்து லீக்’ தொடரின் 6-வது சீசன், சென்னை ஷெனாய் நகர் பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
13 வயதுக்குட்பட்டோருக்கான இப்போட்டிகளில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 43 அணிகள் களமிறங்கியுள்ளன. ஒரு வாரம் நடைபெறும் இத்தொடரின் தொடக்க விழாவில், சென்னையின் எப்.சி. அணியின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அகில் பிரகாஷ் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
இளம் வீரர்களுக்கு முறையான போட்டிகளில் பங்கேற்கும் அனுபவத்தை வழங்குவதுடன், அவர்களின் கால்பந்து திறனை மேம்படுத்துதல், குழுவாகச் செயல்படுதல் மற்றும் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் இத்தொடர் வாய்ப்பளிக்கிறது.
சென்னை கால்பந்து லீக்கில் பங்கேற்ற ஏ.ஐஸ்வர்யா, தற்போது தமிழ்நாடு மாநில ஜூனியர் கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும், எஸ்.ஹரிஹரன் ‘சாய் அகாடமி’ கல்வி உதவித்தொகையையும், மருவா பர்சீன் தமிழ்நாடு அரசின் விளையாட்டு உதவித்தொகையையும் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து சென்னையின் எப்.சி. தலைமை செயல்பாட்டு அதிகாரி அகில் பிரகாஷ் கூறுகையில், இளம் வயதிலேயே ஏராளமான மாணவர்கள் முறையான கால்பந்து போட்டிகளில் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற முயற்சிகள் அடிமட்ட அளவிலான விளையாட்டு திறமைகளை கண்டறிந்து வளர்க்க உதவும் என்றும் தெரிவித்தார்.
லேட்டண்ட்வியூ இணை நிறுவனர் பிரமத் ஜந்தியாலா கூறுகையில், கால்பந்து மூலம் குழந்தைகள் ஒன்றிணைவது உற்சாகம் அளிப்பதாகவும், விளையாட்டின் மீதான ஆர்வம் மைதானத்தைத் தாண்டியும் தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார். இத்தொடரின் இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற உள்ளன.



