நாகர்கோவில் டிச 12
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞர்களிடம் ரூ.50 லட்சத்திற்கு மேல் ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி தொகுதி மாவட்ட தலைவர் சாலோமன் தீபக் தலைமையில் மாவட்ட எஸ்.பி., சுந்தர வதனத்திடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;
குமரி மாவட்டம் களியல் அருகேயுள்ள நாராயணத்து விளை பகுதியை சேர்ந்தவர் வில்சன்(56) இவரது மகன் சஜின் மோன்(25) இவர்கள் இருவரும் வாட்ஸ்அப் குரூப்களில் வெளிநாட்டு முன்னணி நிறுவனம் ஒன்றில் பலதரப்பட்ட வேலைகள் இருப்பதாக விளம்பர பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
அந்த விளம்பரத்தை பார்த்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் பலர் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.அப்போது அவர்கள்,நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் சென்னையில் மருத்துவ தகுதி சான்று எடுத்துக் கொடுத்தால் தான் அனுப்ப முடியும் என கூறியுள்ளார்கள் .
அதற்கு சம்மதம் தெரிவித்த இளைஞர்கள் ரூ.15 ஆயிரம் செலுத்தி மருத்துவ பரிசோதனை முடித்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.மருத்துவ சான்றை வாங்கிக் கொண்டவர்கள்,தங்களுக்கு வெளிநாட்டு கம்பெனியில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
பின்னர்,மருத்துவ சான்றை கம்பெனிக்கு அனுப்பி வைப்பதாகவும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்பு விசா பற்றிய விபரம் கூறுவதாக கூறியுள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு மருத்துவ சான்று ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது .இனி ஒர்க் ஆர்டர் பிராசஸ் செய்ய வேண்டும் அதற்கு ரூ. 25 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் அனைத்து இளைஞர்களிடமும் கூறியுள்ளார் .
இளைஞர்கள் எத்தனை நாட்களில் முடியும் என கேட்டுள்ளனர் .அதற்கு பணம் கட்டிய தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் வேலைக்கான பணி ஆணை வரும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து இளைஞர்கள் நாராயணத்துவிளையில் உள்ள வில்சன் வீட்டிற்கு சென்று பணத்தை கொடுத்துள்ளனர்.
பணத்தை பெற்று கொண்ட வில்சன்,ஆறு மாதத்திற்கு பிறகு இளைஞர்களை தொடர்பு கொண்டு வேலைக்கான ஆணை வந்துவிட்டது இனிமேல் விசா ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,அதற்கு ஒரு லட்சம் கட்டவேண்டும் என்று கூறியுள்ளார்.
வில்சனின் பேச்சை நம்பிய இளைஞர்கள் அனைவரும் வில்சனின் மகன் சஜித் வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளனர்.அதன்பின்பு இளைஞர்கள் அவர்கள் இருவரையும் தொடர்பு கொண்டு விசா பற்றி கேட்டபோது,விசா ஒரு வாரத்தில் வந்துவிடும் 10 நாட்களில் வந்து விடும் எனக் கூறி ஏமாற்றி வந்துள்ளனர்.
பலமுறை இருவரின் வீட்டிற்கு இளைஞர்கள் நேரடியாக சென்று விசா பற்றி கேட்டு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் சரியான பதிலை தராமல் இன்று நாளை என கூறி ஏமாற்றி வந்தார்கள் . வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்களுக்கு நாட்கள் போக போக வில்சன் மற்றும் சஜித் இருவரும் திட்டமிட்டு ஏமாற்றி பண மோசடி செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பணத்தை திருப்பி கேட்க சென்ற அவர்கள் இருவரும் இளைஞர்களிடம் பிரச்சினை செய்துள்ளனர் .அது சம்பந்தமாக களியல் காவல்துறை உதவி ஆய்வாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் தற்போதும் வேறு படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்து வருகிறார்கள்.
எனவே இளைஞர்களிடம் பண மோசடி செய்த வில்சன் மற்றும் சஜித் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து, இளைஞர்கள் இழந்த பணத்தை திருப்பி கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



