சிவகங்கை, 20.08.2026
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, நான்கு ஆண்டுகள் பணிக்காலம் நிறைவடைந்து நாளையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது பணிக்காலத்தில் பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக வளர்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
தனது பணிக்காலத்தில் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். தொலைதூரக் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, புதிய திறன் மேம்பாட்டு திட்டங்கள், பல்கலைக்கழகத்தின் நிதி நிலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பல்கலைக்கழகத்திற்கு A++ தரச்சான்று 4.59 மதிப்பெண்ணுடன் கிடைத்தது, சுமார் 430 ஏக்கர் நிலத்திற்கான பட்டா பெறப்பட்டது, பல்வேறு வகையான சுமார் 17,000 மரங்கள் வளர்க்கப்பட்டன, நான்கு பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டன உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கொண்டு உயர்தர அங்கீகாரத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் பசுமை சூழலை உருவாக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்திய அளவில் பல்கலைக்கழகம் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வள்ளல் அழகப்பரின் கொடைத்தன்மையால் உருவான இந்தப் பல்கலைக்கழகத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல அனைவரும் இணைந்து செயல்பட்டதாக கூறிய ரவி, நான்கு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய மனநிறைவுடன் பதவியில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்தார்.



