நாகர்கோவில், பிப். 9 –
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து குமரி மாவட்டத்திற்குட்பட்ட 50 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1316 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகள் இன்று முதல் வழங்கப்பட்டது.
நாகர்கோவில் பறக்கை எம்.டி.பி.சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அழகு மீனா தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து கூறியதாவது: தூய்மை பணியாளர்களுக்கு உணவு கொடுக்கின்ற இந்த அற்புதமான திட்டம், உண்மையிலேயே ஒரு பெரிய மகத்தான திட்டமாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் 1372 தூய்மை பணியாளர்களுக்கும், குழித்துறை நகராட்சியில் பணிபுரியும் 108 தூய்மை பணியாளர்களுக்கும், பத்மநாபபுரம் நகராட்சியில் பணிபுரியும் 111 தூய்மை பணியாளர்களுக்கும், குளச்சல் நகராட்சியில் பணிபுரியும் 91 தூய்மை பணியாளர்களுக்கும், கொல்லம்கோடு நகராட்சியில் பணிபுரியும் 187 தூய்மை பணியாளர்களுக்கும், கன்னியாகுமரி நகராட்சியில் பணிபுரியும் 82 தூய்மை பணியாளர்களுக்கும், 50 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1316 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது என கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்சி லதா, அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



