தூத்துக்குடி, பிப்ரவரி 19 –
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மற்ற மாவட்டங்களின் எல்லை சோதனை சாவடியில் நடைபெற்று வரும் காவல்துறையினரின் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மற்ற மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, வாகனங்களின் விபரங்களை பதிவேட்டில் பராமரித்தும் மேலும் சோதனை சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் மாவட்டத்தின் உள்ளே மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களயும் ஆய்வு செய்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்துங்கநல்லூர் சோதனை சாவடியில் நடைபெற்று வரும் காவல்துறையினரின் கண்காணிப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜுன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



