ஈரோடு ஏப் 19
ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசுவாமி கோயில் உள்ளது .
இந்த கோவிலுக்கு விஷேச நாட்கள் மட்டும் அல்லாமல் தினமும் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து தரிசித்து செல்கிறார்கள். இந்த கோவிலில் உயரமான முருகன் சிலை அமைக்க வேண்டும் என்ற ஈரோடு மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதைதொடர்ந்து திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக 180 அடி உயர முருகன் சிலை மற்றும் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதைக்கு செல்வதற்கு புதியதாக படிவழிப்பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் அன்னதானத் திட்டத்தில் தினசரி 50 பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அதிக அளவில் வருவதை கருத்திற் கொண்டு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள், அமாவாசை நாட்கள், மாத சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் 200 பக்தர்களுக்கும், கந்த சஷ்டித் திருவிழா நடைபெறும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 பக்தர்களுக்கும் விரிவுபடுத்தி அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சட்ட சபையில் அறிவித்தார்.



