நாகர்கோவில், பிப். 20 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் 10, 12-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு குறித்து ஒருங்கிணைப்பு குழுவினருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மார்ச் – 2026 அரசுப் பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்பிற்கு 02.03.2026 முதல் 26.03.2026 வரையிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 13.03.2026 முதல் 06.04.2026 வரையிலும் மற்றும் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு 03.03.2026 முதல் 27.03.2026 வரை நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களிலும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களிலும் நடைபெறவுள்ளது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 5736 மாணவர்களும் 5487 மாணவிகளும் மொத்தம் 11,220 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 5761 மாணவர்களும் 5052 மாணவியர்களும் மொத்தம் 22,033 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் திருத்துவபுரம், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நாகர்கோவில், புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 12ம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
12ம் வகுப்பிற்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களாக மார்த்தாண்டம், அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் செயல்படும். மேற்கண்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 22 வழித்தடங்கள் மூலம் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு வினாத்தாள்கள் எடுத்துச்செல்லப்படும். 11ம் வகுப்பிற்கான தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு 03.03.2026 முதல் 27.03.2026 வரை நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 67 தேர்வு மையங்களிலும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களிலும் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 5380 மாணவர்களும் 5438 மாணவிகளும் மொத்தம் 10818 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 5267 மாணவர்களும் 5381 மாணவியர்களும் மொத்தம் 10648 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் கருங்கல், பெத்லெகேம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நாகர்கோவில், கார்மல் மேல்நிலைப்பள்ளி ஆகியவை விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்பிற்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களாக மார்த்தாண்டம், அரசு (பெ) மேல்நிலைப்பள்ளி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் செயல்படும். மேற்கண்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 25 வழித்தடங்கள் மூலம் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு வினாத்தாள்கள் எடுத்துச்செல்லப்படும். இத்தேர்வுகள் எவ்வித புகாருமின்றி சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், காவல்துறை, மின்சாரவாரியம், போக்குவரத்து, சுகாதாரம், நாகர்கோவில் மாநகராட்சி சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



