கோவை, செப்டம்பர் 11: கோவையில் 9-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரனின் யோசனையில் உருவான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘ஹிட் லேர்ன்’ கற்றல் செயலியின் அறிமுக விழா நடைபெற்றது. திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஹரிஹரன், 8-ம் வகுப்பு விடுமுறையின்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீது ஏற்பட்ட ஆர்வத்தால் கோடிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கற்கத் தொடங்கியுள்ளார்.
கோவையில் உள்ள ஹோம் ஐடியாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டபோது, படிக்கும் நேரத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் பெற முடியாத சிக்கலை ஹரிஹரன் உணர்ந்துள்ளார். இதற்கு தீர்வாக, மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை கற்றுக்கொண்டு, சந்தேகங்களை குரல் மூலம் கேட்டு உடனடியாக விளக்கம் பெறும் வகையில் ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த யோசனையை அடிப்படையாகக் கொண்டு, தான் கோடிங் கற்ற நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து ‘ஹிட் லேர்ன்’ செயலியின் தொழில்நுட்ப அம்சங்களை உருவாக்கியதாக ஹரிஹரன் தெரிவித்தார். செயலி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த தனது கருத்துகளை வழங்கியதுடன், ஒரு யோசனை தொழில்நுட்ப தயாரிப்பாக உருவாகும் செயல்முறையிலும் அவர் நேரடியாக பங்கேற்றுள்ளார்.
‘ஹிட் லேர்ன்’ செயலியில் மாணவர்கள் தங்களது வகுப்பைத் தேர்வு செய்து கற்றல் காணொலிகளைப் பார்க்கலாம். மேலும், பாடம் தொடர்பான புரிதலைச் சோதிக்கும் வகையில் வினாடி வினாக்கள் மற்றும் புதிர்கள் இடம்பெற்றுள்ளன. குரல் மூலம் கேள்வி–பதில், பல்மொழி ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல், ஊடாடும் மதிப்பீடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



