கன்னியாகுமரி, அக். 13 –
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று.
குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில்தான் அமைந்து உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான இன்று (திங்கட்கிழமை) 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 6.30 மணிக்கு கணபதி ஹோமமும்,7.30 மணிக்கு தீபாரதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து 1008 சங்குகள் சிவலிங்கம் வடிவில் வைத்து பூஜை செய்யப்பட்டு குகநாதீஸ்வர பெருமானுக்கு சங்காபிஷேகமும் நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் 12.30 மணிக்கு வாகன பவனியும் நடைபெற்றது.
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேள தாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் செய்து இருந்தனர்.



